24 Tamil News
சினிமா

பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியீடு இல்லை.. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!

N.F.Rifka

admin

பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியீடு இல்லை.. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் வெளியாகாமல் போகிறது.

நடிகர் விஜய்யின் இறுதிப் படமான ஜனநாயகன் திரைப்படம் இன்று (ஜனவரி 9 ஆம் தேதி) வெளியாக இருந்தது. ஆனால் படத்துக்கு சென்சார் வழங்கப்படாமல் இருந்த காரணத்தால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் வழக்கு விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்ததால் படம் வெளியாக முடியாமல் போனது.

ஜனநாயகன் திரைப்படம் வெளியாக விடாமல் அரசியல் செய்து வருவதாக பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய்க்கும் படத்துக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு நடைபெற்ற விசாரணையில் படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். அந்த உத்தரவில் இந்த வழக்கின் தீர்ப்பளித்த நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் சென்சார் சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவது ஏற்புடையது அல்ல.

இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தாமல் இருந்தாலும், புகார் தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வாய்ப்பளிக்காததாலும் சென்சார் போர்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வில், மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ ஆர் எல் சுந்தரேசன் முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் இருதரப்புக்கும் பல்வேறு கேள்விகளை உயர்நீதிமன்றம் முன்வைத்தது. அதில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகவில்லை என்றால், பல கோடி இழப்பு ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும், சென்சார் முடிவாகாத நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஏன் முடிவு செய்தீர்கள்? முன்னதாகவே தணிக்கை வாரியம் குறிப்பிட்டு இருந்தால், அப்போதே ஏன் வழக்கு தொடரவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் தனிநீதிபதி பி.டி. ஆஷா வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்சார் கிடைக்காத போதிலும் ரிலீஸ் தேதியை முடிவு செய்து விட்டு, உயர்நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது. இதனால் ஜனநாயகன் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த ஜனநாயகன், வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் வெளியாகாமல் போகிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.